தஞ்சையில் ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 13-க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
தஞ்சை நகரின் மையப்பகுதியில் உள்ள மேற்கு எல்லையம்மன் கோயில் தெருவில் பால்ராஜ் என்பவரது வீடு உள்ளது. இவரது வீட்டில் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்கும் மளமளவென்று பரவியது. கிராம மக்கள் தீயை அணைக்க போராடியும் தீ அதற்குள் 13 வீடுகளுக்கு பரவியது. இதில் 13 குடிசை வீடுகளும் தீக்கிரையாகின.
வீட்டிற்குள் இருந்தவர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியேறியிருக்கின்றனர். தங்களால் முடிந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு நடு வீதிக்கு வந்தனர். தகவலறிந்து வந்த தீயணப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்தத் தீவிபத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. வீடுகள் எரிந்ததால் அனைத்தையும் இழந்த மக்கள் நடு வீதியில் தவித்து வருகின்றனர்.