மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகளாக மின் உற்பத்தி நடைபெறுகிறது. 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் செயல்படும் பிரிவில் திடீரென நேற்று தீ விபத்து ஏற்பட்டது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்டெய்னர் பெல்ட் பகுதியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக 840 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வுக்குப் பிறகு சேதத்தின் முழு விபரம் தெரியவரும். கடந்த 2012ஆம் ஆண்டு இதேபோல் பெரும் தீவிபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக உயிர் இழப்புகள் எதுவும் இல்லை.