கருணாநிதிக்கு இறுதி மரியாதை.. மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி..!

கருணாநிதிக்கு இறுதி மரியாதை.. மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி..!
கருணாநிதிக்கு இறுதி மரியாதை.. மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி..!

திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்திய தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள நன்றிக் கடிதத்தில், ஓய்வறியா சூரியனை இழந்து, நீங்களும், நானும் மட்டுமன்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் கண் கலங்கி நிற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். ஜ‌னநாயகத்தின் அணையா தீபமாகவும், சுயமரியாதைக் கொள்கையின் குன்றாகவும் , நாட்டின் பன்முகத் தன்மையை பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும் , திராவிட இனத்தின் உணர்வுகளை போற்றிப் பாதுகாத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என புகழாரம் சூட்டியுள்ளார்.

மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் , தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் உயிரைக் காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை மருத்துவர்களுக்கும், அவரின் உடல் நிலை குறித்த செய்திகளை உ‌டனுக்குடன் வழங்கிய ஊடகத்தினருக்கும் , திமுக செயல் தலைவர் என்ற முறையிலும் கருணாநிதியின் மகன் என்ற முறையிலும், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவுக்கு தலைவர் கருணாநிதி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு , சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளதையும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அண்ணாவுடன் இணையும் "இறுதிப் பரிசை" நீதியரசர்கள் வழங்கியிருப்பதாகவும், அதற்காக கடற்கரை நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளை திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

காவிரி நதி தீர்த்தில் பிறந்து வளர்ந்த கருணாநிதியை, காவேரி மருத்துவமனையில் இருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை கண்கலங்கி நின்றாலும், கட்டுப்பாடு காத்த தொண்டர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார். மிக சோதனையான காலகட்டத்தில் தலைவர் கருணாநிதியின் லட்சிய தீபத்தை கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com