சொந்த வீட்டை விற்றுவிட்டு பிரிந்தவர்களா நீங்கள் ? ஒரு நெகிழ்ச்சி பதிவு
பெரு நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி. ஒரு சராசரி மனிதனுக்கு சொந்த வீடென்பது ஒரு கனவு. சிலருக்கு அந்தக் கனவு தன் மூதாதையர் மூலம் நிறைவேறி இருக்கலாம், சிலர் உழைத்து சொந்த வீட்டை வாங்கியிருக்கலாம். பெரு நகரங்களில் தீப்பெட்டி அடுக்குபோல் இருக்கும் அடுக்குமாடிகளில் ஒரு பகுதி சொந்த வீடாக மாறியிருக்கும். அப்படிப்பட்ட சொந்த வீட்டை விலகி வேறு ஒரு பகுதிக்கு செல்லும்போதே மனதெங்கும் வலி பரவும். மேலும், ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த சொந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு செல்லும் போது மனம் முழுவதும் ஏற்படும் சோகம் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. அப்படிப்பட்ட ஒரு சோகத்தை ஃபேஸ்புக்கில் கவிதையாக பதிவு செய்திருக்கிறார் ஜெயபுதீன் என்பவர். அதற்கு ஞாபகமாய் மாறுகிற வீடு ! என தலைப்பு குடித்து அசத்தியிருக்கிறார்.
இதோ அந்த உணர்சிக் கவிதை உங்களுக்காக !
நேற்றுமுதல் அவருக்குச்
சொந்தவீடாகிவிட்டதிந்த வீடு.
வீட்டையொழித்துப் பாத்திரங்களைக் கட்டிவைத்து
பொருட்களை முன்னறையில் வைத்து விடிகாலைவரும் லாரிக்காய்க் காத்திருக்கிறதென் வீடு.
கட்டில்களை பீரோக்களை பெட்டிகளை பெட்டகத்தைப்
பலவருட இருப்பிடத்திலிருந்து
நகர்த்த முடிந்தவனின் ஞாபக
வேர்களைப் பிடுங்கியெறிதல்
சாத்தியமேயில்லை.
மரணமாய்ப் பிள்ளையாய்
கண்ணீராய் திருநாட்களாய்
கல்யாணமாய் பூத்தநாட்களாய்
எல்லாமும் உடனிருந்து சுகித்த
பழைய வீடொன்று இந்தக்
குளிரிரவில் மெல்ல ஞாபகமாகிக் கொண்டிருக்கிறது.
அப்பாவைத்த கொய்யாவும் பாதாமும் அக்காவைத்த பவளமல்லியும் துளசியும் கனகாம்பரக்குற்றும் மதிலோரமாய்ப் புதைத்த
செல்ல நாய்க்குட்டிகளின் ஞாபகத்தையும் இனி விலகுதலே
சாத்தியம்.
விழுந்த பல்லைச் சாணத்தில் பொதிந்து கூரைமேல் விட்டெறிய அதைப்
பொக்கிஷமாய்ப் பற்றிக்கொண்ட
செவ்வோடுகளைப் பிரிவதொன்றே
வழி.
அதிகாலையில் லாரியிலேறி தொலைதூரப் பயணம் தொடங்கியபின் தானியத்திற்காய் வீடுதேடிவரும் குருவிகள்
மைனாக்களிடம் எந்த மொழியில்
புரியவைப்பேன் என்
இடப் பெயர்ச்சியை.?
அருகாமைக் கடைக்குப் போகும் போதெல்லாம் வாங்கிப்போடும் பொறைக்காக வாலாட்டியபடிப் பின் தொடரும் நாலைந்து தெருநாய்களின் நேசத்தை எப்படிநான் மறுதலிப்பேன்.?
ஒருவிள்ளல் இட்லிக்காக தலைகீழாய் மரமிறங்கிவரும் அணிற்பிள்ளையை அதன் பிரிவை
எப்படித் தாங்குவான் என்
செல்ல மகன்.
நாளைமுதல் ஞாபகங்களால் ஆகிவிடும் நான் வாழ்ந்த வீடு."
- ஜெயபுதீன்
கோவை