வாயில்லா பிராணிகளுக்கு உணவளிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கும் உணவு கிடைக்க தனியார் நிறுவனங்களும், தன்னார்வலர்களும் முன்வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்கக்கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‘தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 9 லட்சம் ரூபாயை விடுவித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது’ எனத் தெரிவித்தார்.
இருப்பினும் தெரு விலங்குகளுக்கு உணவளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழக அரசு மாவட்ட ரீதியாக ஒதுக்கியுள்ள தொகையைில் சில மாவட்டங்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது, இது போதுமானதல்ல’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து, தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக அரசு நிதி ஒதுக்கும் முன், 10 லட்சம் ரூபாயை ஆளுனர் ஒதுக்கீடு செய்ததாகத் தெரிவித்த நீதிபதிகள், கொரோனா ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கு உணவளிக்க நிதியுதவியோ, பொருளுதவியோ வழங்க தனியார் நிறுவனங்கள் முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 9 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
- முகேஷ்