குடும்ப வறுமைக்காக ஆடு மேய்க்க மகன்களை விற்ற தந்தை
தனது இரண்டு மகன்களையும் வறுமைக் காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு தந்தையே விற்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அம்மணிசத்திரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி இறந்துவிடார். இவருக்கு ஏழு வயதில் தங்கப்பாண்டி மற்றும் ஐந்து வயதில் ஈஸ்வரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். தந்தையின் வறுமைக் காரணமாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே விளங்குலம் பகுதியைச் சேர்ந்த அங்குச்சாமி மற்றும் அவரது மகன் ஆனந்தகுமார் ஆகியோருக்கு 2 மகன்களையும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆனந்தகுமார் அந்த இரண்டு சிறுவர்களுக்கும் சரியாக உணவு வழங்காமல் அடித்து துன்புறுத்தி ஆடுகளை மேய்க்க பயன்படுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் லதாவிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் கிடைத்த நிலையில், அவர்களை மீட்க உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, நிகழ்விடத்திற்குச் சென்று இரண்டு சிறுவர்களையும் ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மீட்டனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சிறுவர்களை மீட்டதோடு, மகன்களை விற்ற தந்தை ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், சிறுவர்களை கொடுமைப்படுத்தி ஆடு மேய்க்க வைத்த ஆனந்தகுமாரின் தந்தை அங்குச்சாமியை கைது செய்ததோடு, தப்பியோடிய ஆனந்தகுமாரை தேடி வருகின்றனர்.