வேதாரண்யம் அருகே தலைஞாயிறு பகுதியில் நெற்பயிரிலிருந்து கதிர் வெளிவரும் நேரத்தில் கஜா புயல் அடித்தால் பயிர்கள் சாய்ந்தால் சம்பா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே துளசாபுரம், சாக்கை வட்டாக்குடி, தலைஞாயிறு ஐந்தாம் சேத்தி போன்ற கடைமடை பாசனப் பகுதியில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆற்றில் தண்ணீர் வராததால் தாமதமாகவே சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்றது. தண்ணீர் வரவேண்டிய நேரத்திற்கு வராததால் இரண்டு முறைக்கு மேல் நெல் விதைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நெற்கதிர்கள் வெளிவரும் நேரத்தில் கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி வீசிய கஜா சூறைக்காற்றால் நெற்பயிரிலிருந்த நெல்மணிகள் காற்றில் அடித்து சென்று விட்டன. நெற்பயிர்கள் தரையில் சாய்ந்ததால் வெளிவந்த கதிர்களில் நெல்மணிகள் பாதி பதராகவும் பாதி நெல்லாகவும் உள்ளது. இந்த சூழலில் சாக்கை துளசாபுரம் போன்ற கிராமங்களில் தற்போது அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒருமணி நேரம் அறுவடை செய்ய இயந்திரத்திற்கு வாடகையாக ரூ 2300 வழங்கப்படுகிறது. இயந்திரம் மூலம் அறுவடை செய்வதால் வைக்கோல்கள் அழுகி குப்பை கூலமாக உள்ளது. இதனால் அவற்றை கால்நடைகளுக்கு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 10 மூட்டை நெல் கிடைக்க வேண்டிய நிலையில் புயல் பாதிப்பு காரணமாக 3 மூட்டை தான் நெல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் நெற்பயிர் பாதிப்பிற்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.