கோயில் நிலத் தகராறு: இருதரப்பு மோதலில் ஒருவர் கொலை

கோயில் நிலத் தகராறு: இருதரப்பு மோதலில் ஒருவர் கொலை
கோயில் நிலத் தகராறு: இருதரப்பு மோதலில் ஒருவர் கொலை

சீர்காழி அருகே பெருமாள் கோயில் இடத்தில் மாந்தோப்பு அமைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கூத்தியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவருக்கு திருமணமாகி ரமாதேவி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று இரவு கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் பொதுமக்கள் கூடி, ஊரில் உள்ள 3 குளங்களை ஏலம் விடுவது மற்றும் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மாந்தோப்பு அமைப்பது குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

இதற்கு ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துடன், கோயில் இடத்தில் இளைஞர்கள் விளையாடுவதற்கான மைதானம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. இதில் கோயில் இடத்தில் மாந்தோப்பு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள், சரவணனை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் அங்கு வந்த சீர்காழி டிஎஸ்பி வந்தனா, நேரில் விசாரணை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து கொள்ளிடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சரவணனை கொலை செய்த ஆறு பேரை தேடி வருகின்றனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க கூத்தியம்பேட்டை கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com