வயிற்றில் கட்டி: கர்ப்பம் எனக் கூறி 7 மாதம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெண் வயிற்றில் கட்டியிருப்பதை அறியாத அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி 7 மாதம் சிகிச்சை அளித்த அவலம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன், அஸ்வினி தம்பதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அஸ்வினி ஓராண்டுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். சோதனையில் அஸ்வினி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஏழு மாத காலம் கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 19ஆம் தேதி வயிற்று வலி இருப்பதாக அஸ்வினி மருத்துவரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து தருமபுரியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்வினி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொண்ட வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்