
ஜெ.தீபா வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதற்காக வந்தவர், போலி அதிகாரி என்று தெரிய வந்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, சென்னை தியாகராய நகரில் வசித்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை அவர் நடத்தி வருகிறார். இவரது தி.நகர் வீட்டுக்கு இன்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி என்று ஒருவர் வந்தார். வீட்டில் ஜெ.தீபா இல்லாத நிலையில் அவர் கணவர் மாதவன் மட்டுமே இருந்தார். மேலும் சில வருமான வரித்துறை அதிகாரிகள் பத்து மணிக்கு வருவார்கள் என்றும் அவர்கள் வந்த பின் வருமான வரித்துறை சோதனை நடக்கும் என்றும் வந்தவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் மீது சந்தேகம் அடைந்த மாதவன் மாம்பலம் போலீசாருக்கு தெரிவித்தார். அவர்கள் ஜெ.தீபா வீட்டுக்கு விரைந்துவந்து அந்த ’வருமான வரித்துறை அதிகாரி’யிடம் விசாரித்தனர். விசாரித்துக் கொண்டிருக்கும்போது, அந்த ’அதிகாரி’ ஓட்டம் பிடித்தார். அவர் போலி அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். எதற்காக அவர் தீபா வீட்டுக்கு வந்தார் என்பது பற்றிய விவரம் அவரை பிடித்து விசாரித்தால்தான் தெரியவரும்.