சட்டப்பேரவை நிகழ்வுகள்: ஆளுநர் மாளிகையில் அறிக்கை தாக்கல்
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூட்டப்பட்ட தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் அறிக்கை அளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக வீடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆளுநர் மாளிகையில் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஆளுநர் மாளிகையில் நேரில் அளித்தார். முன்னதாக ஆளுநரிடம் அளிக்கப்பட வேண்டிய அறிக்கை தொடர்பாக தலைமைச்செயலகத்தில் பேரவைச்செயலாளர் ஜமாலுதீனுடன், சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கடும் அமளி ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், அமளியில் ஈடுபட்டதாக திமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் குறித்து ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியே புகார் அளித்தனர். இதுதொடர்பாக விரிவான வீடியோ பதிவு காட்சிகளுடன் அறிக்கை அளிக்குமாறு சட்டப்பேரவை செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருப்பதால் ஆளுநரின் முதன்மை செயலரிடம் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பான அறிக்கை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.