“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு

“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு
“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு

தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுநாள் வரை இருந்த தென்காசி இப்போது தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட பிரிவினைக்கு பின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது குறித்த தனது உணர்வை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது பலராலும் ஷேர் செய்யப்படுகிறது. அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

“வீட்ல துருதுருனு வயசுக்கு வந்த ஒரு பொண்ணு இருந்து, அத கட்டிக்கொடுத்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வச்ச பிறகு ஒரு வெறுமை, சோகம், மகிழ்ச்சி, அயர்ச்சி எல்லாம் கலந்த ஒரு உணர்வு வருமே! அப்படியொரு உணர்வில்தான் திருநெல்வேலி மாவட்ட மக்கள் அனைவருமே இருக்கிறோம்.

ஆம்! தென்காசி எங்கள் நெல்லை மண்ணின் மகள்! மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பல பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் அவள் பெண்! அவளை தமிழ்நாட்டுக்கு இன்னொரு மாவட்டமாக கட்டிக்கொடுத்து தனியாக வாழ வழியனுப்பி வைத்துவிட்டோம்.

சும்மா அனுப்பல... நாடே வியக்குமளவு சீதனம் கொடுத்து அனுப்பியிருக்கிறோம். குற்றால அருவிகள், தாமிரபரணியின் கிளை ஆறுகளான சிற்றாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி ஆகிய நான்கு கிளை ஆறுகள், அதன்மேல் கடனா, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய ஐந்து அழகான அணைகள் என்று இயற்கை எழில்கொஞ்சும் பல பகுதிகள் அவள் பெற்ற சீதனம்! இது தவிர, எங்கள் வற்றாத ஜீவநதி தாமிரபரணியின் பாபநாசம் அணையிலிருந்து ஒரு பங்கு குடிநீர் வழக்கம்போல தினமும் அவளுக்கு செல்லும்.

இவளல்லாது எங்கள் நெல்லை மண்ணிற்கு ஒரு மூத்த மகனும் இருக்கிறான். அவன் பெயர் தூத்துக்குடி! தொழில் வளம் மிக்க மாவட்டமென்பதால் அவன் ஆண்மகன்! தொழில் வளத்தில் நெல்லையை பின்னுக்குத்தள்ளி தோளுக்கு மேல வளர்ந்துட்டு வர்றான்.

பொறுப்பாக சம்பாதிக்கும் ஒரு மகன், ஒரு அழகான மகள்! இதுதான் எங்கள் நெல்லை குடும்பம். மகளை நல்லபடியாக கட்டிக்கொடுத்த பின் பெற்றோர் என்னமாதிரியான மனநிலையில் இருப்பார்களோ அதே உணர்வுதான் இப்போது இரண்டு மாவட்ட பிரிவினை கண்ட திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கும்.

நெல்லையின் மகள் தென்காசி தமிழகத்தின் புதிய மாவட்டமாக உதயமாகியிருக்கிறாள். எங்கள் திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இதுவரை மற்ற மாவட்ட மக்கள் எப்படி ஆதரவு அளித்து வந்தீர்களோ அதுபோலவே நெல்லையின் மகள் தென்காசிக்கும் ஆதரவளியுங்கள். அவள் மென்மேலும் வளர தாய் திருநெல்வேலி மக்களின் வாழ்த்துகள்!” என அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com