நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’
தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை, புதுவை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, கடலோர கர்நாடகா, புதுச்சேரி, தமிழகம், காரைக்கால் ஆகிய இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழை இருக்கும் எனவும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூரில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.