தமிழ்நாடு
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைப்பு
தொடர்ந்து 13 வது நாளாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் சீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால் கடந்த 7 ம் தேதி உபரி நீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் உபரி நீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிக கனமழை பெய்யும் என்பதால் நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட உயரம் 20.46 அடியாகவும், நீர்வரத்து 2700 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2717 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
மழை நின்று போனதாலும் ஏரியின் நீர் மட்டம் 20 அடிக்கு மேல் இருப்பதால் 23 அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை கண்காணிக்க பொதுப்பணி துறை அதிகாரிகள் முடிவு செய்து கண்காணித்து வருகின்றனர். மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து 13 வது நாளாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் சீராக வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.