தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி ஆசிரியர் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக நேற்று ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பல இடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி ஆசிரியர் தேர்வு எழுத முடியவில்லை என பலரும் குற்றம் சாட்டினர்.
இது குறித்து செய்தி அறிக்கை வெளியிட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழகம் முழுவதும் 119 மையங்களில் கணினி ஆசிரியர் தேர்வுக்கு 30 ஆயிரத்து 833 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்றும், பெரும்பாலான மையங்களில் இடர்பாடு இல்லாமல் இத்தேர்வு நடைபெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒரு சில மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில தேர்வர்கள், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது என்றும், எனவே அவர்களுக்காக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள், மையம் சார்ந்த விவரங்கள் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.