கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது - சி.வி.சண்முகம்

கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது - சி.வி.சண்முகம்
கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது - சி.வி.சண்முகம்

கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "அதிமுக ஆட்சியில் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தவறு நேர்ந்து இருப்பதாக திமுக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தவறு நேர்ந்து இருப்பது உண்மைதான். அதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், 2005ஆம் ஆண்டு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பேராசிரியர் தங்கராஜ் எழுதியது அந்தப்பகுதி. அதன்பின் 2006ஆம் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது உயர்க் கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, அந்தப் பாடப்பிரிவை ஏன் சரிசெய்யவில்லை? ஏன் அதை திருத்த முயற்சிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து, "முதல் அலை கொரோனா தொற்றுக்காலத்தில், அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், தற்போது திமுக ஆட்சியில் எடுக்கப்படவில்லை. கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைத்துக் கூறுவதாக தெரிகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தரமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தேசிய பேரிடர் கால சட்டத்தின்படி, கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்" என்று கூறினார்.

சசிகலா குறித்து கேள்வி எழுப்பியபோது, "சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கும், அவருக்கும் உதவியாளராக இருந்தவர் அவ்வளவுதான். ஆனால் அதிமுகவை அடைவதற்கு அவர் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது. கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலாவால் கைப்பற்ற முடியாது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com