கொலுசு முதல் கறி விருந்து வரை! ஈரோடு கிழக்கில் குவியும் பரிசுப்பொருட்கள்; இதோ டாப் லிஸ்ட்!

கொலுசு முதல் கறி விருந்து வரை! ஈரோடு கிழக்கில் குவியும் பரிசுப்பொருட்கள்; இதோ டாப் லிஸ்ட்!
கொலுசு முதல் கறி விருந்து வரை! ஈரோடு கிழக்கில் குவியும் பரிசுப்பொருட்கள்; இதோ டாப் லிஸ்ட்!

தமிழ்நாட்டின் ஹாட் டாபிக்காக இருப்பதே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்தான். பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருக்கும் வாக்குப்பதிவுக்காக தொகுதியில் அரசியல் கட்சிகள் முகாமிட்டு தீவிர பரபரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஆன கே.எஸ்.தென்னரசும், நாம் தமிழர் சார்பி மேனகா, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் என 77 பேர் வேட்பாளர்களாக களமிறங்கி இருக்கிறார்கள். ஒரு தொகுதிக்கான இந்த ஈரோடு இடைத்தேர்தலில் பல கட்சியினர் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பிரதானமாக ஆளும் கட்சியான திமுகவுக்கும், ஏற்கனவே ஆட்சி செய்த கட்சியான அதிமுகவுக்குமே இருமுனை போட்டியாக நிலவி வருகிறது.

இதனால் இரு கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதியையே ஒரு சுழலை போல சுற்றி வருகின்றன. ஆளும் கட்சியான திமுகவோ ஈரோடு கிழக்கில் அமைச்சர்கள் பலரையும் களத்தில் இறக்கியிருக்கிறது. அதேபோல அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியினரோ மாறி மாறி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதுபோக ஓட்டுக்கு பணம் கொடுப்பதகாக அடுக்கடுக்காக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் குவிந்து கொண்டே வருகின்றன. இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றே ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா புகார்கள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இப்படி இருக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் விநியோகிப்பதாக சொல்லப்படும் பரிசுப் பொருட்கள் என்னென்ன என்பதன் விவரங்களை காணலாம்.

அதன்படி, ஈரோடு கிழக்கில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை வீடுகள் இருக்கின்றன? ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்றெல்லாம் வீடு வீடாகச் சென்று அதிகாரிகளை போல கணக்கெடுப்பு செய்து தேவைக்கு ஏற்றபடியெல்லாம் ரொக்கமும் பரிசுப்பொருட்களும் சர்வ சாதாரணமாக விநியோகிக்கப்படுகிறதாம்.

குறிப்பாக பணமாக கொடுப்பதை காட்டிலும் குடும்பத் தலைவிகளை ஈர்க்கும் விதமாக பரிசுப் பொருட்கள் கொடுப்பதுதான் ஆரவாரமாக நடைபெறுகிறதாம். அதிலும் பட்டுப்புடவை, குக்கர், வெள்ளி கொலுசுகள் வழங்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபோக வாக்காளர்களை குஷிப்படுத்த இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்வது காதனி விழா என்ற பெயரில் கறி விருந்து வைப்பதும் நடக்கிறது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி குறித்து கூகுள் மேப் தளத்தில் street view-ல் பார்த்தால் பல இடங்களிலும் சாமியானா பந்தல் மட்டுமே அதிகம் தென்படுவதாகவும் கூறப்படுகின்றன.

அதே நேரத்தில் பணப்பட்டுவாடாவும் ஒருசேர நடத்தப்படுகிறதாம். அதன்படி வாக்குக்கு குறைந்தபட்சம் 2,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை விநியோகம் செய்யப்படுகிறது என்றும், கறி விருந்துடன் புதுப்படங்களை போட்டுவிட்டு காலை மாலை என வாக்காளர்களை அடைத்து வைத்து வேளைக்கு 500 ரூபாயும் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com