"அதிமுகவின் வாக்குவங்கியே அவ்வளவு தான்" - அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

"அதிமுகவின் வாக்குவங்கியே அவ்வளவு தான்" - அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி
"அதிமுகவின் வாக்குவங்கியே அவ்வளவு தான்" - அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்பது, வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொடக்கம்” எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் வரும் ஐந்தாம் தேதி இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி வைப்பதோடு நான்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனையொட்டி திருமண விழா நடைபெறும் இடத்தில், நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “நாளை இரவு கோவை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை காலை 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதோடு, ஒருங்கிணைந்த திமுக சார்பில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தை துவக்கி வைத்து பரிசுகளை வழங்குவார். அதனைத் தொடர்ந்து வ.உ.சி. மைதானத்தில் அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும்  நிகழ்ச்சியில் பங்கேற்பார். மாலையில் கொடிசியாவில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் 2,000 திமுக முன்னோடிகளுக்கு பொற்கொடிகளை வழங்கி விழா பேருரையாற்றுவார்” என்றார்.

“மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 99.7 சதவீதம் நிறைவடைந்துள்ளது”

தொடர்ந்து அவரிடம் “சட்ட விரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளில் மின் இணைப்பைத் துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஒரு சில செங்கல் சூளைகள், சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் முழுவதுமாக சட்டவிரோதம் என்பதை தவறான கருத்தாக பார்க்கிறேன். நீதிமன்றம் சுட்டிகாட்டி உள்ள இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் செங்கல் உற்பத்தியை தொடங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. விரைவில் அதற்கு நல்ல தீர்வு வரும். அனுமதி இல்லாத செங்கல்சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனுமதியோடு இருக்கும் செங்கல் சூளைகளுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இன்று உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

“காரைக்குடி அருகே ஒரு கிராமத்தில் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை... ஏன்?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “வருவாய்த்துறை ஆவணங்கள் சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும். ஆதார் அட்டை மற்றும் வாக்காளரை மட்டுமே மின் இணைப்பு வழங்குவதற்கான ஆவணங்கள் அல்ல. வருவாய்த்துறை ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் மின் இணைப்பு  வழங்கப்படும்.

ஏப்ரல், மே மாதங்களான கோடை காலங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய 4,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது. மற்றபடி இதற்காக டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது. 6,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சோலார் பூங்காவுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின், முதல்வர் அடிக்கல் நாட்டுவார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 99.7 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 0.3 சதவீதம் தான் மீதம் உள்ளது. இன்னும் இரு தினங்களில் அந்த பணிகள் நிறைவடையும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எந்த சிக்கலும் இல்லை; அந்த பணிகளில் எந்த தொய்வும் இல்லை. பெயர் மாற்றுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்.

“ஈரோடு கிழக்குத் தேர்தல் வெற்றி பயணம் என்பது, வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொடக்கம்” 

பின் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இபிஎஸ் விமர்சனத்திற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, “அதிமுக வேட்பாளர் தனது வாக்கை செலுத்திவிட்டு வந்து `வெற்றி பெறுவோம்’ என கூறும்போது வரை தெரியவில்லையா? அதிமுக-வினர், கேள்வி எழுப்பியதோடு தோல்விக்கான காரணங்களை ஏற்கெனவே தேடிகொண்டிருந்தார்கள். அதிமுகவிற்கு அவர்கள் நினைத்த அளவிற்கான வாக்குகள் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் இதுபோன்ற கருத்துகளை கூறி வருகின்றனர். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது நடந்த இடைத்தேர்தலுக்கு என்ன சொல்லபோகிறார்கள்?

ஈரோடு கிழக்குத் தேர்தல் வெற்றி பயணம் என்பது, வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொடக்கம். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 40 தொகுதிகளிலும், முதல்வரின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள். அதற்கான தொடக்கம் தான் ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு” என்றார்.

350 கோடி ரூபாய் வரை இடைத்தேர்தலுக்கு செலவு செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பான பதில் அளித்த செந்தில் பாலாஜி, “அவர்களையே ஆடிட்டர் வைத்து பேலன்ஸ் ஷீட் வெளியிடுமாறு தெரிவித்துக் கொள்கிறேன். போகிற போக்கில் ஏதாவது கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதற்காக, தோல்வியை மறைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மனக்குமுறல்களை கருத்துக்களாக தெரிவிக்கிறார்கள்”

“ஏதாவது ஒரு இடத்துக்காவது, இவர்கள் உண்மையாக இருக்க வேண்டும்”

அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக இடைத்தேர்தலில் தோற்றதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதிமுக ஏற்கனவே சின்னத்தைப் பெற்றுக் கொண்டது. 2021 மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. அதிமுகவின் வாக்கு வங்கி அவ்வளவு தான். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய இயக்கமாக கட்சியை வழிநடத்த வேண்டும். அந்த சூழல் அதிமுகவிடம் இல்லை” என கூறினார். 

நேற்று சிலிண்டர் விலை தொடர்பாக அதிமுக கருத்து தெரிவிக்கவில்லை என கூறிய செந்தில்பாலாஜி, “அதிமுகவின் பொறுத்தவரை, மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. மக்களுக்கான வருங்கால திட்டங்களை பற்றி கவலை இல்லை. மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் நினைப்பதில்லை. அவர்களின் தேவை, யார் டெல்லியில் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பதுதான். ஏதாவது ஒரு இடத்துக்காவது, இவர்கள் உண்மையாக இருக்க வேண்டும். ஒன்று மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் அல்லது அந்த பொறுப்புகளை வழங்கியவர்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் இல்லை என்றால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுதான் அதிமுகவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வைக்கக்கூடிய தீர்ப்பு” என விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com