ஈரோடு இடைத்தேர்தல் | அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சீமான் மீது வழக்குப் பதிவு
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நேற்று முனிசிபல் சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து தெருமுனை கூட்டத்திற்கு நாதக-வினர் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் அறிவுறுத்தியும் அவரை பணி செய்ய விடாமல் பரப்புரை கூட்டத்தை தொடர்ந்து நடத்தியுள்ளனர். இதனையடுத்து, பறக்கும்படை அதிகாரி, ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி, சாட்டை துரைமுருகன், நவநீதன் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது 189(2), 126(2), 174,132 BNS ஆகிய நான்கு பிரிவுகளில் கீழ் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது ஐந்து வழக்குகளும் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.