ஈரோடு | தம்பதி விபரீத முடிவு
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு சூரம்பட்டி வலசு அருகே ராஜாஜி வீதி இரண்டில் வசித்தவர்கள் மாதேஸ்வரன் - கீதா தம்பதியர். இவர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தை இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரரிடம் ஃபோனில் குழந்தை இல்லாதது குறித்து புலம்பி அழுதுள்ளார். இதையடுத்து மாதேஸ்வரனின் சகோதரர், மாதேஸ்வரன் வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காத நிலையில், ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகள் இல்லாத விரக்தியில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.