"செங்கோட்டையனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை.." - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை நீக்குவதில் தயக்கம் இல்லை என தெரிவித்தார். துரோகிகள் அடையாளம் காணப்பட்டதால், அதிமுக செழித்து வளரும் என நம்பிக்கை தெரிவித்தார். டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் இணைந்து பேசுவது பயனற்றது எனவும் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னளாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள கொள்முதல் நிலையங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்தபோது, அங்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை சுமார் 15 நாள்களாக வைக்கப்பட்டிருப்பதாகவும், நாளொன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனால் மூட்டையில் இருந்த நெல்மணிகளெல்லாம் முளைத்துவிட்டன என ஆதங்கத்துடன் தெரிவித்தனர். இதற்கு, ஆட்கள், சாக்கு மூட்டைகள், லாரிகள் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் செய்யப்படவில்லை என தெரிவித்தனர். இதனைக் எடுத்துக் கூறினால் அவதூறு பரப்புவதாக முதல்வர் கூறுகிறார் என பேசினார்..
மேலும், உணவு மானியக் கோரிக்கையின்போது, கொள்கை விளக்க குறிப்பில் 2022-23 ஆம் ஆண்டு 29.48 லட்சம் டன், 2023-24- ம் ஆண்டு 29.46 லட்சம் டன், 2024-25-ம் ஆண்டு 28.26 லட்சம் டன், 2025-26ஆம் ஆண்டு 28.30 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டு மொத்தம் 1 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரம் டன் நெல் மட்டுமே திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுதோறும் 42.5 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளதாக முதல்வர் பொய்யான தகவலை கூறிவருகிறார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகளை பாதுகாக்க அதிமுக ஆட்சியில் மத்திய அரசு நிதி தேசிய பருவநிலை தழுவல் நிதிமுலம் ரூ.165.68 கோடி செலவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் சதுப்புநிலத்தின் அருகாமையில் உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என குற்றஞ்சாட்டினார்..
எஸ்.ஐ.ஆர். -இல் என்ன தவறு இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழகத்தில் இறந்தவர்கள், மாறுதலாகி வேறு இடம் சென்றவர்கள் உள்ளிட்டோர் வாக்குகள் நீக்கப்படவேண்டும். ஆர்கே நகரில் 31 ஆயிரம் வாக்குகள், கரூரில் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கியுள்ளோம். கரூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிக்கப்பட்ட பின்னரும், அங்கு வாக்காளர்கள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே, இறந்தவர்கள் பட்டியல், குறிப்பிட்ட பகுதியில் வசிக்காதவர்கள் பட்டியல் எடுத்து முறையாக ஆய்வு செய்து தகுதியான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. 2026-ம் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்ற பயத்தில் எஸ்ஐஆர் மேற்கொள்ளக்கூடாது என திமுக எதிர்க்கிறது.
செங்கோட்டையன் சார்ந்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் துரோகம் வீழ்த்தப்படும் என செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஒன்று சேர்ந்து பேசியது ஏற்கெனவே அவர்கள் போட்ட திட்டம்தான். இப்படிப்பட்டவர்களின் துரோகத்தால்தான் கடந்த முறை அதிமுக வீழ்த்தப்பட்டது. அதிமுக தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சியில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
செங்கோட்டையனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. தற்போது துரோகிகள் எல்லாம் தற்போது அடையாளம் காணப்பட்டுவிட்டார்கள். எனவே களைகள் அகற்றப்பட்டு அதிமுக செழித்து வளரும். டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றிணைந்து பேசியது எதற்கும் உதவாது. அவர்களைப் பற்றி பேசுவது வீணானது என பேசியுள்ளார்..

