தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் தொண்டர்கள் இணையும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “இப்பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, சாதாரண ஒரு அதிமுக தொண்டன் கூட அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறான். ஆனால், அவருக்கு அந்த எண்ணம் இல்லை. யாருக்கும் எதுவும் செய்யக்கூடாது, எந்த உதவியும் கிடைக்கக் கூடாது என நினைப்பவர் வைத்திலிங்கம்.
தற்போது ஓபிஎஸ் - வைத்திலிங்கம் அதிமுகவின் துரோகிகளாக மாறிவிட்டனர். ஓராயிரம் ஓபிஎஸ் வந்தாலும் - ஓராயிரம் வைத்திலிங்கம் வந்தாலும் துரோகிகளுக்கு அதிமுகவில் எப்போதும் இடம் கிடையாது.
திமுகவின் பினாமியாக ஓபிஎஸ் செயல்பட்டார் என்பது, சபரீசனை சந்தித்ததன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. துரோகிகள் என்று மாறி மாறி கூறிக் கொண்டவர்கள் இப்போது ஒன்றாக இணைந்துவிட்டனர். ஓபிஎஸ் - டிடிவியால் எந்த காலத்திலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. 1.5 கோடி தொண்டனின் சொத்து அதிமுக. ஒரு செங்கலை கூட அவர்களால் கைப்பற்ற முடியாது. ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - வைத்திலிங்கம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. திமுகவை வீழ்த்துவதுதான் எங்கள் லட்சியம்.
நாம்தான் அதிமுக, நமக்கு எதிரி திமுக. தற்போது தமிழகத்தில் எங்கும் எதிலும் லஞ்சம். இரண்டு வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரி பணம் சுருட்டப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அவரும் இது குறித்து ஆதாரங்களை திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பணம் கண்டிப்பாக மீட்கப்படும். மேலும் 30,000 கோடி ரூபாய் ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநரை சந்தித்து விரைவில் மனு கொடுக்க உள்ளோம்” என தெரிவித்தார்.