அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர்: இபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்ட உள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் பொன்விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு 'எம்ஜிஆர் மாளிகை’ என பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படும் என்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயாலிதா ஆகியோரின் படங்களுடன் சிறப்பு லோகோ வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளனர்.
அதிமுகவின் வளர்ச்சிக்காக பணியாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத்துறையினருக்கு இந்த ஆண்டுமுதல் சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்குவதோடு, அதிமுகவில் பணியாற்றிய மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யப்படும் என்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.