”உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா? ” - எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், இரண்டு நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் (19) என்ற இளைஞரை 17 வயதுடைய 4 சிறார்கள் கத்தி மற்றும் அரிவாளால் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த சம்பவத்தின் பாதிப்பு அடங்குவதற்குள், திருப்பூரில் நேற்று இரவு போதையில் இருந்த நபர் ஒருவர் கத்தியைக் கொண்டு காவலரை தாக்க முயன்ற சம்பவமும் நிகழ்ந்தது. அதோடு, திருத்தணி ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்தவரை 2 இளைஞர்கள் தாக்கிய சம்பவம் என தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் மக்களிடைடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இதையடுத்து, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், ”திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.
போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர் முதல்வர் ஸ்டாலின்? அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
"தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை" என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா? கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, இராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான முதல்வருக்கும் தெரியாதா என்ன?
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?" எனத் தெரிவித்திருகிறார்.

