அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை... மீண்டும் பரபரக்கும் கரூர்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, அவரது நிதி நிறுவனம் உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அலுவலகத்துக்கு சீல் வைத்து சென்றனர். தற்போது இரண்டாம் முறையாக நான்கு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கரூர் - மதுரை புறவழிச்சாலையில் உள்ள அம்பாள் நகரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவர் வீட்டிலும், செங்குந்தபுரத்தில் சங்கரின் நிதி நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

மட்டுமின்றி சின்னாண்டான் கோயில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் கடை மற்றும் அதன் உரிமையாளர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் என்பவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கரூரில் மார்பில் கடை நடத்தி வருகிறார்.

இவர் கரூர் மட்டுமல்லாது காங்கேயம், தர்மபுரி ஆகிய இடங்களிலும் மார்பில் கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிக அளவில் இவர்கள் ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மார்பில் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் மூலம் பெரிய அளவில் நிலத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்களையும் அமலாக்கத்துறையினர் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com