கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில், கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது.
இயற்கை எழில் கொஞ்சும் பவானியாற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது தேக்கம்பட்டி. இந்த இடத்தில் தான் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. அறநிலையத்துறை சார்பில் கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கின்ற வகையில் ஆண்டுதோறும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நடைபெறுகிறது. 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 28 யானைகள் லாரிகள் மூலம் முகாமிற்கு வந்தடைந்தன.
முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா, அதனைதொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் கோதை, பழனி கோயில் கஸ்தூரி, சிவகங்கை காளையார் கோவில் செண்பகவல்லி ஆகிய யானைகள் வந்திறங்கின. அவற்றுக்கு சிறப்பு பூஜையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. புத்துணர்ச்சி முகாம்கள் யானைகள் உற்சாகமடைவதாக பாகன்கள் கூறுகின்றனர்.
சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட யானைகள் முகாமில், அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், தீவனமேடை, சமையல் கூடம், யானைகளுக்கான கொட்டகைகள், குளிப்பதற்கான ஷவர் மேடைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காட்டு யானைகள் நுழைவதை தடுக்கும் வகையில், சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாமில் மகிழ்ச்சியாக அடுத்த ஒன்றரை மாதங்களை யானைகள் கழிக்க உள்ள நிலையில் அதை கண்டு மகிழ ஏராளமான பொது மக்களும் சின்னஞ்சிறு கிராமமான தேக்கம்பட்டியில் குவிய உள்ளனர்.