டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது சின்னதம்பி யானை
கோவையில் மயக்கஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி யானை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், மருத்துவக் குழுவுடன் இணைந்து சின்னதம்பி யானைக்கு மயக்கஊசி செலுத்தி கும்கி யானை உதவியுடன் நேற்று பிடித்தனர்.
பின்னர் யானையை வாகனத்தில் ஏற்றும் முயற்சியின்போது, பின்னால் இருந்து கும்கி யானை தள்ளியதில் அதன் தந்தங்கள் குத்தி சின்னதம்பிக்கு காயம் ஏற்பட்டது. மேலும் வாகனத்தில் மோதி அதன் 2 தந்தங்களும் உடைந்து சின்னதம்பி யானை அவதிப்பட்டது. அப்பகுதி மக்கள், வனவிலங்கு ஆர்வலர்களிடம் இது சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு வரப்பட்டது. காயமடைந்த சின்னதம்பி யானைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு காயம் ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் நள்ளிரவு ஒரு மணியளவில் டாப்சிலிப் வனப்பகுதியில் சின்னதம்பி யானையை வனத்துறையினர் விட்டனர். சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.