வாழிடத்தை தேடி 3 நாட்களில் 100 கி.மீ தூரம் கடந்த சின்னதம்பி..!
காட்டு யானை சின்னதம்பி உடுமலை அருகே தற்போது தஞ்சமடைந்துள்ளது. வாழிடத்தை தேடி கடந்த 3 நாட்களில் 100 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்துள்ள சின்னதம்பி தற்போது உடுமலை ரயில்நிலையத்திற்குள் புகுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர்.
ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னதம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது. கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னதம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. சின்னதம்பி உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் உதவியுடன் யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் பின் தொடர்ந்து வந்தனர்.
அதன்படி தற்போது காட்டுயானை சின்னதம்பி உடுமலை அருகே தஞ்சமடைந்துள்ளது. வாழிடத்தை தேடி கடந்த 3 நாட்களில் 100 கிலோமீட்டர் தூரம் கடந்த சின்னதம்பி உடுமலை ரயில்நிலையத்திற்குள் புகுந்துள்ளது. யானை சின்னதம்பியை காண ரயில் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனிடையே யானை சின்னதம்பியை காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தினால் கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.