ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹாடா வனத்தில் பெண்யானை இரு குட்டிகளை ஈன்றுள்ளது. பொதுவாக யானைகள் ஒரு குட்டி மட்டுமே ஈனும் இயல்புடையது. இது அரிதான நிகழ்வு என்றும் இதன் மூலம் அங்குள்ள வனத்தில் உள்ள தாய் யானை திடகாத்திரமான நல்ல உடல்வாகுடன் உள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்,தெங்குமரஹாடா, கருவண்ணராயன் கோவில் வனத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து தகவல் சேகரிப்பதற்கு தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது. அதில் கடந்த சில நாள்களாக பதிவான புகைப்படங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். பெண்யானை ஒன்று இரு குட்டிகளுடன் இருப்பது பதிவாகியுள்ளது. குட்டிகளை ஈன்ற தாய்யானைக்கு வயது 26.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது, பெண்யானை 15 வயதில் கர்ப்பம் தரித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும். அதன் கர்ப்பகாலம் 20 மாதங்கள். குட்டி பிறந்தவுடன் உடனடியாக ஆணா அல்லது பெண்ணா என கண்டுபிடிக்க முடியாது. அது 6 மாதம் வரை வளர்ந்த பிறகு அதில் யானை கொம்பு வைத்து இனம் காண முடியும். யானை அதன் ஆயுற்காலத்தில் 13 முறை குட்டிகளை ஈனும்’ என்று கூறியுள்ளனர்.
இது தவிர, மேட்டுபாளையம் மற்றும் ஆணமலை ஆகிய இரு புலிகள் காப்பகத்தில் பெண்யானை இது போன்ற இரு குட்டிகளை ஈன்றுள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள குட்டிகளுக்கு விஜய், சுஜய் என்றும் ஆணைமனை புலிகள் காப்பகத்தில் அஸ்வினி மற்றும் பவானி எனவும் பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் யானை ஒன்று இரு குட்டிகளை ஈன்றிருப்பது இது மூன்றாவது முறை என வனத்துறையினர் தெரிவித்தனர்.