மனைவியை தாக்கிய மின்சாரம் - பதறிப்போய் காப்பாற்றச் சென்ற கணவனும் உயிரிழப்பு
லால்குடி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவர், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாரானூர் கிராமத்தின் வடக்கு தெருவில் வசிப்பவர் மகேந்திரன்(36). இவருடைய மனைவி சந்தியா(30). இவர்களுக்கு சந்தோஷ்(4), சர்வேஸ்(3) என இரு மகன்கள் உள்ளனர். மகேந்திரனும் அவருடைய அண்ணன் சக்திவேலும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர்.
இந்நிலையில், சந்தியா வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த போது வீட்டின் சந்து பகுதியில் உள்ள மின்சாரம் செல்லும் எர்த் ஒயரில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கவனிக்காத சந்தி்யா சந்து பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எர்த் ஒயர் பட்டு சந்தியா மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் துடிதுடித்துள்ளார். இதனையடுத்து, மனைவியை காப்பற்ற சென்ற கணவன் மகேந்திரன் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதனைக் கண்ட மகேந்திரனின் அண்ணன் சக்திவேல் காப்பாற்ற சென்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. ஆனால் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். ஆனால் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.