திருவள்ளூரில் வாக்காளர்களுக்குக் கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பானு பிரசாத் அதிமுகவில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க, அவரது வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பானு பிரசாத் வீட்டில் சோதனையிட்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அவரது வீட்டிலிருந்து 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், வீட்டுச் செலவுக்காக வைத்திருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பானு பிரசாத்தை ஆவணங்களுடன் இன்று காலை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர். மேலும், அவரை விசாரணைக்காக சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படியும் ஆணையிட்டுள்ளனர்.