ஆர்கே நகர் தொகுதியில் 30,495 போலி வாக்காளர்களை நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். அவர்கள் அனைவரும் அதிமுக சார்பில் சேர்க்கப்பட்டுள்ள போலி வாக்களர்கள் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் 30,495 போலி வாக்காளர்களை நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திமுக அளித்த புகாரின் அடிப்படையில் போலி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 55 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்கே நகர் தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.