தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப வாக்காளர்களுக்கு பண விநியோகத்திலும் நவீன உத்திகள் பின்பற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பின்பற்றப்படும் மாநிலம் என பெயர்பெற்ற தமிழகம்தான், வாக்காளர்களுக்கு பணம் விநியோகத்திலும் நம்பர் ஒன்னாக திகழ்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தலா 100 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கம் கைப்பற்றப்பட்டதே இதற்கு உதாரணம். என்னதான் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் இருந்தாலும் வாக்குப்பதிவுக்கு சில மணித்துளிகளுக்கு முன்புகூட பண விநியோகத்தை கச்சிதமாக முடித்துவிடுகின்றன அரசியல் கட்சிகள்.
கடந்த காலம் போன்றில்லாமல் இம்முறை பண விநியோகத்திற்கு தொழில்நுட்ப வசதிகள் கைக்கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன்படி, GOOGLE PAY, PHONE PE உள்ளிட்ட முறைகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெற இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. ஆனால் இதனையும் தடுக்க குழு அமைத்திருப்பதாக கூறுகிறார்கள்
அதிகாரிகள். தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், பண விநியோகத்தை 100 சதவிகிதம் தடுப்பது என்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரும் சவாலாக இருக்கப்போகிறது.