”திமுகவிற்கு இதுதான் இறுதித் தேர்தல்..” - எடப்பாடி பழனிசாமி பேச்சு
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, திமுகவிற்கு இது இறுதித் தேர்தல் எனக் கூறினார். திமுக ஆட்சி மக்களுக்கு துன்பம், ஊழல் மட்டுமே கொடுத்ததாகவும், 2026 தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இருந்துவரும் அதிமுக-பாஜக, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அன்புமணி தலைமையிலான பாமகவையும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவையும் கூட்டணிக்குள் இழுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம் என சூளுரைத்த டிடிவி தினகரன், இறுதியில் அதே தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஐக்கியமாகியுள்ளார்.
இந்தசூழலில் தான் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. இப்பொதுக்கூட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களான டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதனையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்த நிலையில், அவரை எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையில், பிரதமர் மோடிக்கு பச்சைத் துண்டு, ஏலக்காய் மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி கௌரவித்தார். மேலும் திருப்பரங்குன்றம் முருகனின் வெள்ளியிலான உருவம் பதித்த நினைவுப் பரிசையும் மோடிக்கு வழங்கினார் பழனிசாமி.
திமுகவிற்கு இதுதான் இறுதி தேர்தல்..
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்த மண்ணிலே கால் வைத்த உடனே, இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. இதுவே நடைபெறவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற போவதற்கு சான்று.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கே முக்கால் ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் இந்த ஆட்சி மக்களுக்கு கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். இதுதான் திமுகவுக்கு இறுதித் தேர்தல். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பேசினார்.
