``குற்றவாளிகளை பிடித்து ஒப்படைப்பது குற்றமா?” - ஈபிஎஸ் கண்டனம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து பேசியிருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, “குற்றவாளிகளை பிடித்து ஒப்படைப்பது குற்றமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது. அனைத்தையும் சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயார். ஏனெனில் எங்கள் மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை, 9 மாத கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், அதை தோல்வி என அறிவிக்க இங்கு சூழ்ச்சி நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலை நகர்ப்புற தேர்தலின்போது ராயபுரம் 49வது வார்டில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், கள்ள ஓட்டு போட்டுவிட்டு தப்பியோடியதாக ஒருவரை துரத்திப்பிடித்து அவரைத் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதுமட்டுமல்லாமல், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவினர் ராயபுரம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர்மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜெயக்குமார் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரின்பேரில் திமுக தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.