"பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை" என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டிருந்தார். தொடர் மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். இதையடுத்து கே.கே.நகரிலும் மழை பாதிப்புகளை அவர் கேட்டறிந்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.
நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் கொடுத்தும் திமுக அரசு மெத்தனமாக செயல்பட்டதாலேயே சென்னையில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அஇஅதிமுக அரசு கொண்டு வந்த அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவு வழங்கியது போல், இப்போது மழைவெள்ளத்தின்போதும் அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்காதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.