சென்னை | நடிகை அருணா வீட்டில் திடீரென ED சோதனை ஏன்? கணவரின் பின்னணி என்ன?
இயக்குநர் பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் முதல் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அருணா . தமிழ் திரையுலகில் 1980ல் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அருணா,கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர், பிரபல தொழிலதிபர் மோகன் குப்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கேசினோ ட்ரை பகுதியில் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில்தான், இவர்களது வீட்டில் அமலாக்கத்துறை இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரைவ் பகுதியில் இந்த சோதனை நடந்து வருகிறது. இரண்டு காரில் வந்த நான்கு பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணியளவில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடுகளில் உட்கட்டமைப்பு அலங்காரப் பணிகளை (architect) மேற்கொள்ளும் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார் அருணாவின் கணவர் மோகன் குப்தா. அமெரிக்காவில் உள்ள லைஃப் பிட்னஸ் என்கிற நிறுவனத்தின் உடற்பயிற்சி உபகரணங்களை இந்தியாவுக்கான டீலர்ஷிப் எடுத்து இறக்குமதி செய்து இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இவர் இதுதொடர்பாக, பணப்பரிவர்த்தனையில் சட்ட விதிகளை மீறியதாக புகார் எழுந்தநிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
நடிகை அருணா தரப்பில் அவரது கணவர் தரப்பிலிருந்தும் தற்போதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும், முழுமையான சோதனைக்குப் பிறகு தொழிலதிபர் மன்மோகன் குப்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?, முக்கிய ஆவணங்கள் ஏதாவது சிக்கி உள்ளதா?, பணம் ஏதாவது கைப்பற்றப்பட்டுள்ளதா?, புகாரில் முகாந்திரம் இருக்கிறதா?, அல்லது வேறு என்ன விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்துகிறார் என்பது குறித்து தெரியவரும் எனவும் அமலாக்கதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.