அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு: தொடரும் விசாரணை.. கைதாகிறாரா அமைச்சர் பொன்முடி?

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம், அமலாக்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவருக்கு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 13 மணி நேரமாகச் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை - சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

வீட்டின் முதல் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தைத் திறந்து, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அமைச்சர் பொன்முடி வீட்டில் கடந்த 13 மணிநேரம் நடைபெற்ற சோதனையில் 70 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் உட்பட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து அமலாக்கத் துறையினர் அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது நள்ளிரவு நீடிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில் தற்போதுவரை பொன்முடி கைது செய்யப்படவில்லை எனக் கூறியுள்ள அமலாக்கத்துறையினர், PMLA சட்டத்தின் 50வது பிரிவின் கீழ் வாக்குமூலம் பெறுவதற்காகவே அமைச்சர் பொன்முடியை அலுவலகத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com