முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கில், தனியார் நிறுவனங்களின் ஏஜெண்டிடமிருந்து கணக்கில் காட்டப்படாத நில பத்திரங்களை லஞ்ச ஒழிப்புதுறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்தக் குவிப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 55 சதவிகிதம் வரை சொத்து சேர்த்ததாகவும் கூறப்பட்டது. மேலும், போக்குவரத்துத் துறை டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா எனவும் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக, போக்குவரத்துத் துறையில் டெண்டர்பெற்ற நிறுவனங்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட, சென்னை அண்ணாநகரில் உள்ள ரவிக்குமார் என்பவரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 12 மணி நேரம் நடைபெற்ற சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத நில பத்திரங்கள், வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டன. மேலும் 3 லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே விஜயபாஸ்கர் டெண்டர் ஊழலில் ஈடுபட்டாரா என்பது குறித்து தெரியவரும் என லஞ்ச ஒழிப்புதுறைத் போலீசார் தெரிவித்தனர்.