திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி! அடுத்த பொருளாளர் யார்..?
திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் கடந்த வாரம் (98) காலமானார். இதனையடுத்து பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கிடையே திமுகவின் பொதுச்செயலாளராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. துரைமுருகனுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனால் தற்போது துரைமுருகன் வகித்துவரும் பொருளாளர் பதவியில் இருந்து அவர் விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதனை தான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனால் வரும் 29ம் தேதி பொதுச்செயலாளர் தேர்தலுடன் பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே துரைமுருகன் பொதுச் செயலாளர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேசமயம் பொருளாளர் பதவிக்கு ஏ.வ.வேலு, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோர் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.