திருவள்ளூர்: ஆற்றின் வழியே முழங்காலளவு தண்ணீரில் சடலங்களை சுமந்து செல்லும் அவலம்

திருவள்ளூர்: ஆற்றின் வழியே முழங்காலளவு தண்ணீரில் சடலங்களை சுமந்து செல்லும் அவலம்

திருவள்ளூர்: ஆற்றின் வழியே முழங்காலளவு தண்ணீரில் சடலங்களை சுமந்து செல்லும் அவலம்
Published on

திருத்தணி அருகே இறந்தவரின் சடலத்தை ஆற்றில் முழங்காலளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அக்கிராமத்தில் சுடுகாடும் இல்லாததால் ஆற்றங்கரையில் கிராம மக்கள் சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சூரியநகரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொம்ம ராஜபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய சுடுகாடு வேண்டி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக இதுதொடர்பாக வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்து அதிகாரிகளிடத்தில் புகார் கொடுத்தும்‌ நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொம்ம ராஜபுரம் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாததால் அங்குள்ள நந்தி ஆற்றங்கரை ஓரத்தில் அவரை புதைக்க நினைத்து, ஆற்றங்கரையில் முழங்கால் அளவுக்கு தண்ணீரில் மூழ்கியபடி உடலை கொண்டு சென்றுள்ளனர். திட்டமிட்டபடி ஆற்றங்கரை ஓரத்தில் அடக்கம் செய்திருக்கின்றனர். இப்படியாக அவர்கள் சடலத்தை சுமந்து செல்லும் காட்சி, பார்ப்போரை கவலைகொள்ள செய்யும் அளவுக்கு இருக்கின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாடு கேட்டும் நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு பொம்மராஜபுரம் கிராமத்தில் சுடுகாடு அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com