சென்னை அருகே பூவிருந்தவல்லியில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா அரசுப் பள்ளி மாணவர்கள் பேருந்தில் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பூவிருந்தவல்லி அருகே கரையான் சாவடியில் செயல்பட்டு வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நாள்தோறும் பேருந்தில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள், ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறும், மேற்கூரையின் மீதும் பயணம் செய்கின்றனர்.
அதேபோல் பேருந்தில் மிகவும் சத்தமாக தாளம் போட்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பாடல்பாடி நடனமாடி வருகின்றனர். ஷார்ட்ஸ், ரீல்ஸ், இன்ஸ்டா ஸ்டோரி உள்ளிட்ட மோகத்திற்கு அடிமையாகி கெத்து காட்ட வீடியோ பதிவு செய்ய அரசு பேருந்தை தளமாக மாற்றிவரும் பள்ளி மாணவர்களால் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர் நடத்துநர் உள்ளிட்டோர் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு அதிகரிப்பதோடு குற்ற சம்பவங்களும் நடைபெறுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.