உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் சிறை: நீதிமன்றம் கருத்து
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எப்படி முக்கியமோ, அதேபோல வாகனம் ஓட்டுவதற்கு அசல் ஓட்டுநர் உரிமம் முக்கியம் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தெரிவித்தது. ஓட்டுநர் உரிமத்தை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வருபவர்களுக்கும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. அசல் ஓட்டுநர் உரிமத்தை மறந்து வைத்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை தவறாகக் கருத முடியாது என தெரிவித்த நீதிமன்றம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கலாம் என தெரிவித்தது.