தமிழ்நாடு போக்குவரத்து விதிகளில் அதிரடி மாற்றம் - எந்தெந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம்?

தமிழ்நாடு போக்குவரத்து விதிகளில் அதிரடி மாற்றம் - எந்தெந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம்?
தமிழ்நாடு போக்குவரத்து விதிகளில் அதிரடி மாற்றம் - எந்தெந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம்?
தமிழ்நாடு சாலை போக்குவரத்து விதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அபராத தொகைகள் அதிக அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது. எந்தெந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவிலேயே அதிக அளவில் சாலை விபத்து எண்ணிக்கை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 பேர் சாலை விபத்தினால் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் சாலை விபத்துகளில் 1,026 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு நீதிமன்றங்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான விபத்துகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே காரணம் என்று, அதனைத் தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் தான்,சென்னையில் இன்று முதல் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதாவது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் மட்டுமே போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வந்தனர். ஆனால் தற்போது டிரைவர் குடிபோதையில் இருந்தால், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரிடமும் அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் குடிபோதையில் ஓட்டினால், அவருடன் பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த புதிய விதிகள் 26ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. விதி மீறல்களுக்கான அபராத தொகைகளிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி 
1. ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் 
2. தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
3. தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம்
4. ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம்
5. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் 6வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம்
6. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் 
7. ரேஸிங் செய்யும் வகையில் வண்டி ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
8. வாகன பதிவு இல்லாத வாகனத்தை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்
9. மோட்டார் வாகனப்பதிவைப் புதுப்பிக்கத் தவறினால், முதல் முறை ரூ.500 அபராதம், 2வது முறை தவறியதற்கு ரூ.1500 அபராதம் 
10. பிற மாநிலத்திலிருந்து மோட்டார் வாகனத்தை இடம்மாற்றி, 12 மாதங்களுக்குள் மறு பதிவுக்கு விண்ணப்பிக்கத் தவறினால், முதல்முறை ரூ.500, இரண்டாவது முறை தவறியதற்கு ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும்
11. மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கு தவறினால், போக்குவரத்து அறிகுறிகளை வேண்டுமென்றே  சிதைத்தல் அல்லது சேதப்படுத்துதல், முதல் முறை ரூ.500 அபராதமும், இரண்டாவது முறை தவறியதற்கு ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும்.
12. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை வழங்கினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.
13. அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் மோட்டார் வாகனத்தை ஓட்ட அனுமதித்தால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.
14. பதிவு இல்லாமல் மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தினால், முதல் முறை குற்றத்திற்கு ரூ.2500, இரண்டாவது முறையிலிருந்து ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்.
15. வாகனம் ஓட்டும்போது கைபேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதலின் மூலம் பிடிபட்டால், முதல்முறை குற்றத்திற்கு ரூ.1000, இரண்டாவது முறையிலிருந்து ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.
16. மோட்டார் வாகனங்களின் உற்பத்தியாளர், இறக்குமதியாளர் அல்லது விற்பனையாளராக இருப்பது, விதிகளுக்கு முரணாக ஒரு மோட்டார் வாகனத்தை விற்பனை செய்வது / வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், 182எ(1) விதிக்கு கீழ், ஒவ்வொரு மோட்டார் வாகனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com