மேட்டூர் பாமக MLA மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிந்த மருமகள்!

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமக-வை சேர்ந்த சதாசிவத்தின் மீது அவர் மருமகள் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளார். இப்புகார் வழக்கில் சதாசிவத்துக்கு காவல்துறை சம்மன் வழங்கியுள்ளது.

சேலம் மாநகர் சூரமங்கலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோலியா. இவருக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமகவைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் கடந்த 2019ஆம் வருடம் திருமணம் நடந்தது.

தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சங்கர் அவரது மனைவி மனோலியாவை தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்தும் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனோலியா சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் தனது கணவர் சங்கர் மற்றும் மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் தன்னை வரதட்சணை பணம் கேட்டு கொடுமை செய்து வந்ததாக கூறி உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அவரது மனைவி பேபி, மகன் சங்கர், மகள் கலைவாணி ஆகிய 4 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாமக எம்எல்ஏ தன் குடும்பத்துடன் சென்னையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் முன்பு முன்ஜாமின் பெறுவதற்காக நடவடிக்கைகளை எம்எல்ஏ சதாசிவம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவருக்கு சேலம் மாநகர போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதற்கிடையே தற்போது எம்.எல்.ஏ. சதாசிவத்துக்கு வரதட்சணை புகார் வழக்கில் காவல் துறை சம்மன் வழங்கியுள்ளது. சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சதாசிவம் எம்.எல்.ஏ. சம்மனைப் பெற்றுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com