கோவை ஆட்சியருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் மிரட்டல்?- மனுவை எழுந்து நின்று வாங்கவில்லை என கோபம்

கோவை ஆட்சியருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் மிரட்டல்?- மனுவை எழுந்து நின்று வாங்கவில்லை என கோபம்
கோவை ஆட்சியருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் மிரட்டல்?- மனுவை எழுந்து நின்று வாங்கவில்லை என கோபம்

கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு உள்ளதோ என்ற ஐயம் தங்களுக்கும் மக்களுக்கும் எழுந்துள்ளதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மத்திய மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப்பணிகளை ரத்து செய்யக்கூடாது, தொகுதிகளில் அரசு பணி துவக்க நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கூட்டாக மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர். அப்போது ஆட்சியர் சமீரன் தனது இருக்கையில் அமர்ந்தவாறு மனுவை பெற முயன்றார்.

இதனால் ஆட்சியரிடம் முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மேட்டுப்பாளையம் எம் எல் ஏ செல்வராஜ் தாங்கள் அனைவரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் உள்ளதாகவும், “சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மனு கொடுக்கும் போது இப்படி அமர்ந்தவாறு வாங்குவீர்களா? இது என்ன புது பழக்கமாக உள்ளது?” என குரலை உயர்த்தி பேசினர். உடனடியாக ஆட்சியர் நின்று மனுவை பெற்றுகொண்டார். இதனால் மாவட்ட ஆட்சியரின் அறையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களை அதிகரித்தல், அரசு நிகழ்வுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். பொது மக்களை காக்க வைக்காமல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பட்டுள்ளது. மேலும் மழைநீரை முறைப்படி சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது” என்றார்.

இதைத்தொடர்ந்து தற்போதைய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை ரத்து செய்துள்ளதாக குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தவிர்த்துவிட்டு எந்த பதவியிலும் இல்லாத நபர்களை உடன் வைத்துக் கொண்டு பூமி பூஜை உள்ளிட்ட அரசு நிகழ்வுகளை நடத்துவதை அரசு தவிர்க்க வேண்டுமெனவும், திமுக அரசால் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற ஐயம் தங்களுக்கும் மக்களுக்கும் எழுந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

- சுரேஷ்குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com