இருசக்கர வாகனத்தில் அதிவேகம்: தட்டிக்கேட்ட இருவரை வெட்டிக்கொன்ற கும்பல்
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்ட இருவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(38). மெரைன் இன்ஜினியராக இருந்து வந்துள்ளார். அவரது நண்பர் பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் விவேக்(38). இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தகுளம் பகுதியில் இன்று மாலை நின்று கொண்டு இருந்த போது, அங்கே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இன்று பிற்பகல் கொலை செய்த கும்பல் சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாகவும், அதனை கொலைசெய்யப்பட்ட இருவரும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக இருவரை பிடித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.