மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய நீதிமன்றம் தடை!

மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய நீதிமன்றம் தடை!
மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய நீதிமன்றம் தடை!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை வேலங்காடு மயானத்திலிருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதி தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்றபோது தகராறு ஏற்பட்டதால், வேலாங்காடு இடுகாட்டில் சென்னை மாநகராட்சி அடக்கம் செய்தது. அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வழக்குகள் டி.பி.சத்திரம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வேலங்காட்டிலிருந்து கணவரின்  உடலை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக்கோரி மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதை பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்து மே 2-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மார்ச் 31ல் நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலங்காடு மயானத்திலிருந்து மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

உரிய நடைமுறைகள் பின்பற்றி உடலை அடக்கம் செய்யவும், அதற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை தரவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த நடைமுறைகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து ஒரு சுடுகாட்டில் இருந்து மற்றொரு சுடுகாட்டில் அடக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் , ஆர்.என் மஞ்சுளா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், கொரோனாவால் இறந்தவரின் உடலை ஒரு இடத்திலிருந்து தோண்டி வேறு இடத்தில் அடக்கம் செய்வது அவசியமா என விரிவாக ஆராய வேண்டியுள்ளதால், தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டு, மேல்முறையீடு குறித்து மருத்துவரின் மனைவி ஆனந்தி பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஜூலை 21க்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com