அடுத்த இரண்டு மாதங்களுக்கு ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்தக் கூடாது என காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் பல மாவட்டங்களில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்தக் கூடாது என அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் வாய்மொழியாக காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கு மட்டும் அதுவும் தேவையெனில் மட்டுமே இவர்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது மட்டுமன்றி இந்த அமைப்பை கலைக்கவும் ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2013-ல் டிஜிபியாக இருந்த ராமானுஜம் இந்த அமைப்பை கலைக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.