தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம், ஆயுள் முழுக்க ஜெயில்லயே இருக்கட்டும் தஷ்வந்தின் தந்தை

தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம், ஆயுள் முழுக்க ஜெயில்லயே இருக்கட்டும் தஷ்வந்தின் தந்தை

தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம், ஆயுள் முழுக்க ஜெயில்லயே இருக்கட்டும் தஷ்வந்தின் தந்தை

சம்பவம் நடந்து இரண்டு வருஷம் ஆன பின்பும் தஷ்வந்தை ஏன் இன்னும் தூக்கில் போடாமல் வைத்துள்ளார்கள் என அவரின் சித்தி வினவ, அவனுக்கு ஆயுள் தண்டனை வேண்டுமானால் கொடுக்கட்டும். தூக்கத் தண்டனை வேண்டாம் என தஷ்வந்தின் அப்பா கூறியுள்ளார்.

போரூர் தஷ்வந்தை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது. 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, எரித்துக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தந்தையால் ஜாமீன் பெற்று வெளியே வந்தபோது பெற்ற தாயையும் கொலை செய்தார். மும்பையில் தலைமறைவான அவர் தமிழக போலீசார் கைது செய்தனர். தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் உறுதி செய்ததோடு அவருக்கு தூக்குத் தண்டனையையும் வழங்கியது. தண்டனை வழங்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆன நிலையில், தஷ்வந்தை மீண்டும் ஜாமீனில் வெளியே எடுக்க அவரது தந்தை முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து "ஆனந்த விகடன்" வார இதழுக்கு தஷ்வந்தின் தந்தை மற்றும் அவரது சித்தியை பிரத்யேகமாக பேட்டி கண்டுள்ளது. அதில் அவர் சித்தி கூறியிருப்பதாவது, “ ஒரு ஈ, எறும்புக்கு கூட துரோகம் நினைக்காதவள் என் அக்கா. என் மாமாவுக்கும் மிகவும் நல்ல மனசு. ஆனால் அவர்களுக்கு போய் இப்படி ஒரு மகன். சிறு வயதில் இருந்தே தஷ்வந்த் செல்லமாக வளர்ந்த பையன். பிடிவாதக்காரன். நினைத்ததை பெற்றோர்கள் மூலம் சாதித்துக் கொள்வான். எல்லாக் குழந்தைகளும் சிறு சிறு தவறு செய்யும். ஒருகட்டத்தில் திருந்திவிடும். அப்படித் தான் தஷ்வந்தையும் நினைத்தார்கள். அந்த சிறுமி காணாமல் போன அன்று கூட என் அக்கா எனக்கு போன் செய்தாள். எப்படியும் கிடைத்துவிடும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். ஆனால் குற்றம்சம்பவத்திற்கு காரணமே தன் மகன் என்று தெரிந்தபோது நொந்துபோனாள். அவன் ஜாமீன்ல வந்தபோதும் கூட வீட்டில் அவனுக்கு நல்லாத் தான் அக்கா சாப்பாடு போட்டாள். ஆனால் ‘ஒரு குழந்தையை போய் இப்படி பண்டிட்டியே உனக்கு உறுத்தல் இல்லையாடா’ என அக்கா அவனிடம் அடிக்கடி கேட்டுள்ளார். அந்த ஆத்திரத்தில் தான் என் அக்காவையே கொலை செய்துள்ளான்.  இவ்வளவு நடந்தும் ஏன் இன்னும் உயிரோடு வச்சிருக்காங்கன்னு தான் தோணுது. அவனை சீக்கிரமே தூக்கில் போடணும். அப்போதுதான் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும். குழந்தைகள் மீது கையை வைக்கிறவங்களுக்கும் பயம் வரும்” என்று கூறியுள்ளார்.

தந்வந்த்தின் தந்தையான சேகர் கூறும்போது, “ அவனை வெளியே எடுக்க நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. இனி எப்பவும் அவனுக்கு ஆதரவாக போகமாட்டேன். சின்னவயசில் இருந்து அவனுக்கு எல்லாத்தையும் ஆசைப்பட்டு செஞ்சேன். ஆனால் கண்காணிக்க விட்டுவிட்டேன். அப்போதே என் மனைவியின் பேச்சை கேட்டிருந்தால் இவ்வளவு தூரம் சென்றிருக்காது. அவன் மீது இருந்த பாசம், செல்லம் கொடுக்க வச்சிட்டு. ஆனால் அவனுக்கு தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம். ஆயுள் முழுக்க ஜெயில்லயே இருக்கட்டும். ஏற்கெனவே இரண்டு உயிர்கள் போய்விட்டு. இன்னொரு உயிரும் போக வேண்டாம்” என தெரிவித்தார்.

நன்றி: ஆனந்த விகடன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com